தமிழ் சினிமா வரலாற்றில் சர்சைகளையும், போராட்டங்களையும் சந்தித்து வெற்றி பெற்ற படங்கள் நிறைய உண்டு. விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க அட்லீ இயக்கத்தில் தீபாவளியன்று வெளி வந்த 'மெர்சல்' திரைப்படம், தமிழ்நாட்டில் இந்த படம் 12 நாட்களில் 100 கோடி ரூபாய் மொத்தவசூலைக் கடந்துள்ளதாக விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மதிய காட்சி வரை இரட்டை இலக்கத்தில் டிக்கெட் விற்பனைக்கே போராட வேண்டியிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படம் பார்க்க ஆட்கள் வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
படம் அவ்வளவுதான் முடிந்தது கணக்கு என எண்ணிய வேளையில் வெள்ளி பிற்பகல் காட்சி முதல் ஞாயிற்றுகிழமை கடைசிக் காட்சி வரை வஞ்சகம் இல்லாமல் கல்லாவை நிரப்பியிருக்கிறது மெர்சல். தமிழ்நாடு தியேட்டர் வசூல் என்னவென்று சொல்ல மாட்டேன் என்று நேற்று அபிராமி ராமநாதன் கூறியிருந்தார். அதற்கு அவசியமில்லை. இதோ நாம் திரட்டிய தகவலின் அடிப்படையில், மெர்சல் 12 நாட்களில், 100 கோடி ரூபாய் மொத்த வசூலைக் கடந்துள்ளது என்பது புதிய சாதனைதான்.
தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியைக் கடந்த படமாக இதுவரை ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படம் மட்டுமே இருந்தது. தெலுங்கு 'பாகுபலி 2' படத்தின் தமிழ் பதிப்பு 100 கோடி மொத்த வசூலை கடந்துள்ளது.
இப்போது தமிழ்ப் படமான 'எந்திரன்' படத்தின் சாதனையை 'மெர்சல்' படம் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 'எந்திரன்' படத்தின் தமிழ்நாடு மொத்த வசூல் சுமார் 110 கோடி ரூபாய். அந்தத் தொகையையும் அடுத்து வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் இந்த வார வசூல் போன்று இருந்தால் 'மெர்சல்' கடந்து விடும்.
இந்த வசூலுக்கு சந்தேகமில்லாமல் பாரதிய ஜனாதா கட்சி தமிழிசை சௌந்தர்ராஜனின் எதிர்மறையான பேச்சும், அதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளுமே முக்கிய காரணம் என்கின்றனர் விநியோகஸ்தர் தரப்பில். ஆனால் அடுத்து வரும் அஜித், விஜய், சூர்யா படங்களின் சம்பளம் மற்றும் வியாபாரத்தில் மெர்சல் பட வசூல் கணக்கு முன் வைக்கப்படும் ஆபத்தும் உள்ளது என்பது தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்களின் கவலை.