ஹைதராபாத்: பிரபாஸும் அஜீத் மாதிரியே ஒரு விஷயத்தில் அடம்பிடிக்கிறாராம். பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. வெயிட் பிரச்சனை காரணமாக அனுஷ்காவால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சுஜீத் இயக்கி வரும் சாஹோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் வெளிநாட்டில் நடக்கிறது. அங்கு சில ஆக்ஷன் காட்சிகளை படமாக்குகிறார்கள். ரிஸ்கான ஆக்ஷன் காட்சிகள் என்பதால் டூப் போட்டுக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் பிரபாஸிடம் கூறினாராம். பிரபாஸோ டூப் எல்லாம் வேண்டாம் நானே தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறாராம். படத்தில் வெளிநாட்டை சேர்ந்த பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர்கள் வேலை பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் இருக்கும் தைரியத்தில் துணிந்து ரிஸ்க் எடுக்க முடிவு செய்துள்ளாராம் பிரபாஸ்.
எவ்வளவு ரிஸ்கான ஆக்ஷன் காட்சி என்றாலும் டூப் போடாமல் நானே நடிப்பேன் என்று அடம்பிடிப்பார் அஜீத். அவரை போன்றே தற்போது பிரபாஸ் அடம்பிடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.