சென்னை: பிரசாந்த் நடிக்க அவரது அப்பா தியாகராஜன் தயாரிக்கும் படம் 'ஜானி'. இந்தப் படத்தில் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றிச் செல்வன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சஞ்சிதா ஷெட்டி திடீர் ஹீரோயின் ஆனதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன்.
'ஜானி ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை. 17 விதமான செட்டுகள் போட்டு படமாக்கி இருக்கிறோம்.' எனப் பட உருவாக்கம் பற்றித் தெரிவித்துள்ளார். முதலில் இந்தப் படத்தில் பிரஷாந்த் ஜோடியாக அனைன்யா சோனி எனும் மும்பை மாடல் அழகி ஒருவர் நடித்தார். அவர் அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு பட்டமெல்லாம் வாங்கியவர். மிகவும் அழகாக இருந்தார். இரண்டு நாட்கள் ஜானி படத்தில் அவர் நடித்தார். ஆனால் அவருக்கு நடிப்பு சரியாக வரவில்லை. நாங்களும் எவ்வளவோ முயற்சித்தோம். அவரும் முயற்சித்தார் முடியவில்லை. பிறகு அவரே என்னால் நடிக்க முடியவில்லை, முறையாக கற்றுக் கொண்டு வருகிறேன் என்றார்.
நாங்களும் அதை ஏற்று அவரை படத்திலிருந்து விடுவித்தோம். இப்போது அவர் நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார். பயிற்சி முடித்து வரும்போது நானே எனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பேன். படப்பிடிப்புகளுக்கான ஷெட்யூல் போடப்பட்டுவிட்டதால் உடனடியாக ஹீரோயின் தேவைப்பட்டார். அப்போதுதான் சஞ்சிதா ஷெட்டியை தொடர்பு கொண்டு கேட்டேன். நாளைக்கே படப்பிடிப்புக்கு வரமுடியுமா என்றேன். அவரும் மற்ற கமிட்மெண்டுகளை ஒதுக்கி வைத்து விட்டு வந்து நடித்தார்.
சஞ்சிதா ஷெட்டிக்கும் இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும். சஞ்சிதா ஷெட்டி மாதிரியான நடிகைகளைப் பார்ப்பது அபூர்வம் என்றார் 'ஜானி' படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன்.