சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' படம் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக தயாராகிவருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், அப்படிக் கூறவேண்டாம் என ரஜினிகாந்த் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடிப்பில் ஷங்கர் இயக்கும் '2.0' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நேற்று நள்ளிரவு துபாயில் நடந்த பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டன.
படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் நிலையில் இரண்டு பாடல்கள் மட்டுமே தற்போது வெளிவந்துள்ளன. இந்தப் பாடல்கள் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகின்றன. துபாயின் புர்ஜ் பார்க்கில் பிரமாண்டமாக நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் '2.0' படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த ஷங்கருக்கு நன்றி கூறினார். 'இந்தியாவில் இப்படி ஒரு படம் இனி வருமா என்று கூறமுடியாது. ஆனால் ஷங்கரால் நிச்சயம் அது முடியும். நாமே '2.0' ஹாலிவுட்டை மீறிய படம் என கூறிக்கொள்வது தண்டோரா அடிப்பது போல் இருக்கிறது. படம் பார்த்த பிறகு அதை நீங்கள் எல்லோரும் உணர்வீர்கள்' என ரஜினி பேசினார்.