சென்னை: நடிகர் பொன்வண்ணன் நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகக் கொடுத்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் நடிகர் பொன்வண்ணன் நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். விஷாலுக்கு எதிராக நடிகர் சேரன், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி வகித்துக்கொண்டு தேர்தலில் நிற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடர்ந்து நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்தது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் சங்கத் தேர்தலில், சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட முந்தைய நடிகர் சங்க நிர்வாகிகள் செய்த முறைகேடுகளை முன்வைத்து தேர்தல் களத்தில் இறங்கிய நாசர், விஷால், பொன்வண்ணன் தலைமையிலான பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன், தான் ராஜினாமா செய்வதாக நடிகர் சங்கத்திற்கு கடிதம் கொடுத்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்திருந்தார். பொன்வண்ணன், கடந்தவாரமே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்ட நிலையில், அவரின் ராஜினாமாவை நிர்வாகிகள் ஏற்காமல் தொடர்ந்து அவரிடம் பேசி வந்தனர். ஆனால் பொன்வண்ணன், ராஜினாமா செய்வதில் உறுதியாக இருந்தார். நடிகர் சங்கச் செயலாளர் பதவி வகித்துக்கொண்டு விஷால் தேர்தலில் போட்டியிட நினைத்தது தவறு எனக் கூறினார் பொன்வண்ணன்.
"பொன்வண்னனின் ராஜினாமா கடிதம் தொடர்பாக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். பொன்வண்ணனின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து நிர்வாகிகளும் கூறியுள்ளனர். எங்களது நிலைப்பாட்டை பொன்வண்ணனிடம் தெரிவித்து விட்டோம். அவரது முடிவை விரைவில் மறுபரிசீலனை செய்து சொல்வார்" என நேற்று கூறினார் நாசர்.
"நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அளித்த கடிதத்தை வாபஸ் பெறுகிறேன்" எனக் கூறியிருக்கிறார் நடிகர் பொன்வண்ணன். நடிகர் சங்க நிர்வாகிகளின் பேச்சுவார்த்தைக்கு இணங்கி இந்த முடிவுக்கு வந்துள்ளார் பொன்வண்ணன்.