சென்னை: விமல் நடித்த 'எத்தன்' படத்தை இயக்கியவர் சுரேஷ். தற்போது இவர் பாம்பை அடிப்படையாகக் கொண்டு ஃபேன்டசி த்ரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார்.
ஜெய் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கேத்தரின் தெரசா, வரலட்சுமி, ராய் லட்சுமி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் 'நீயா' என்ற படம் பாம்பை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் படம் பற்றிக் கூறியுள்ளார் இயக்குநர் சுரேஷ். "இது முழுக்க முழுக்க புதுமையான என்டர்டெயின்மென்ட் படம். கமல் நடித்த 'நீயா' படத்தின் கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை. படத்தின் கதை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. மூன்று முதன்மையான ஹீரோயின்கள் இருந்தாலும் மேலும் சில நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்" எனக் கூறியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ்.