சென்னை: 'மெர்சல்' திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்கிறார் தளபதி விஜய்.
விஜய் - முருகதாஸ் கூட்டணி 'கத்தி', 'துப்பாக்கி' ஆகிய இரு படங்களின் அசத்தலான வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக இணைவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் தகவல் உறுதிப்படுத்தப் படாமல் இருந்துவந்த நிலையில், சற்று முன்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணையும் 'விஜய் 62' படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன்பு வெளியாகி இருக்கிறது. ஏற்கெனவே, விஜய் நடித்த 'வேட்டைக்காரன்', 'சுறா' ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம், அந்த இரன்டு படங்களுமே சரியாகப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2010-ம் ஆண்டு வெளியான 'எந்திரன்' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இந்தப் படம் உலகம் முழுவதும் பெரிய வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் மீதான வழக்குகளால் தயாரிப்பை தொடராமல் படங்களை விநியோகித்து மட்டும் வந்த சன் பிக்சர்ஸ் மீண்டும் தயாரிப்பில் குதித்துள்ளது. விஜய் 62 படத்தில் பணியாற்றவிருக்கும் படக்குழுவினர் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறாராம்.
விஜய் 62 படத்தின் எடிட்டராக 8 முறை தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத்தும், ஒளிப்பதிவாளராக 'சோலோ', 'அங்கமாலி டைரீஸ்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தில் கலை இயக்குனராக டி.சந்தானம் கமிட்டாகியுள்ளதாக சற்று முன்பு தகவல் வெளியானது. இவர் 'ஆயிரத்தில் ஒருவன்', சித்தார்த் நடித்த 'காவிய தலைவன்' ஆகிய படங்களுக்காக மாநில அரசின் விருதுகள் பெற்றவர்.