சென்னை: எச்.வினோத் இயக்கத்தில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டைப் பெற்ற படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் வினோத், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் சத்தியன் சூரியன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய கார்த்தி 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை தமிழ் ராக்கர்ஸில் கூட பாருங்கள். ஆனால், அதற்கு ஈடாக யாருக்காவது எங்கள் பெயரைச் சொல்லி உதவி செய்யுங்கள்' எனக் கூறியுள்ளார். ஒரு படம் பார்த்துவிட்டு படம் நல்லா இருக்குன்னு சொன்னால் மட்டும் போதாது மக்கள் அனைவரும் திரையரங்கில் வந்து படம் பார்க்க வேண்டும். இயக்குநர் வினோத்தின் முதல் படம் அருமையான படம் ஆனால் இந்த படம் அதையும் தாண்டி வந்துள்ளது. வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குநர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ச்சியாக படங்கள் பண்ண முடியும். அதிகாரிகள் நெகிழ்ச்சி காவல்துறை சம்மந்தபட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமான கதையாக இருந்ததால்தான் இந்தப்படம் வெற்றிப் படமாக அமைய முடிந்தது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு காவல் அதிகாரிகள் தொலைபேசி மூலம் என்னிடம் பேசினார்கள். முக்கியமாக அந்த வழக்கில் சம்பந்தபட்ட ஒரு உயரதிகாரி படம் பார்க்கும்போது மிக நெகிழ்சியாக இருந்தது என அனைவரையும் பாராட்டினார்.
தோல்விகளையும், அவமானங்களையும் தாண்டி வரும் போது தான் நாம் ஒரு செயலில் முழுமை அடைகிறோம். இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். தோல்வி வாழ்வின் ஒரு அங்கம் அதை நீங்கள் சந்தித்தே தீர வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும் அப்போது தான் அவர்கள் ஒரு செயலில் உறுதியாக இருப்பார்கள். வளர வேண்டும் என்றால் தோல்விகளை தாண்டித்தான் வர வேண்டும் என்று பெற்றவர்கள் குழந்தைகளுக்குச் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். சில பெற்றோர்கள் பொறுமை இழந்து குழந்தைகளை அடிக்கிறார்கள். குழந்தைகளை அடிக்க வேண்டாம். சம்பாதிப்பதை விட குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப முக்கியம்.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை எங்கள் பகுதியில் பார்க்க முடியவில்லை என ஒருவர் கூறினார். அதற்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு படத்தை தமிழ் ராக்கர்ஸில் பார்த்துவிட்டு அதற்கான பணத்தை எங்கள் பெயரைச் சொல்லி தானம் செய்து விடுங்கள் எனக் கூறினார். அது எனக்குப் பிடித்திருக்கிறது. அதையேதான் நான் சொல்கிறேன். தமிழ் ராக்கர்ஸில் பாருங்கள் 'தமிழ் ராக்கர்ஸ்' உள்ளிட்ட பைரசி சைட்டுகளில் படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படவேண்டும். நல்ல படத்தைப் பார்த்தால் அதற்கான பணத்தை எங்கள் பெயரைச் சொல்லி யாருக்காவது தானமாகக் கொடுத்து விடுங்கள்' எனக் பேசியிருக்கிறார் கார்த்தி.