சென்னை: நடிகர் கமல்ஹாசன் நேரடி அரசியலில் களம் காண இருக்கிறார். சில மாதங்களாக பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் கமல் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு வார இதழில் கமல் தெரிவித்த 'இந்து தீவிரவாதம்' பற்றிய கருத்தால் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. கமல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாரணாசியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கமல் கருத்துக்கு எதிராக இந்துத்வா அமைப்புகள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது இயக்குநர் விசு, கமலின் செயல்களை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவொன்றை எழுதியுள்ளார். கமல்ஹாசன், எஸ்.வி.சேகர் இணைந்து நடித்த 'சிம்லா ஸ்பெஷல்' படத்தை இயக்கியவர் விசு என்பது குறிப்பிடத்தக்கது.
ஹலோ கமல்ஜீ... நீங்க நடிச்ச 'சிம்லா ஸ்பெஷலுக்கு' கதை திரைக்கதை வசனம் எழுதின விசு நான். பெரிய அரசியல்வாதி ஆயிடுவீங்க வாழ்த்துக்கள். இந்து மதமும், இந்துக்களும் வடிவேலுவோட பாஷைல சொல்லப் போனா 'எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க' ங்கறதைப் புரிஞ்சுண்டு, அவங்களை சீண்டி விட்டா, யாராவது எங்கேயாவது எகிறுவான், அவனை வச்சு பாலிடிக்ஸ் பண்ணலாம்னு யாரோ ஒரு குள்ள நரி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கு. 'இந்து மதம் தீவிரவாதிகள் இல்லாத மதம் இல்லைன்னு சொல்ல முடியாது' ன்னு நீங்க எதையோ வழக்கம் போல தலைய சுத்தி வளைச்சு மூக்கைத் தொடப்போக, யாரோ ஒருத்தன் எங்கேயோ மூலைல 'உங்களைத் தூக்கில போடணும்' னு கதறப் போக, அரசியல்ல போணி ஆனவன் ஆகாதவன், அரசியல்ல விளங்கினவன் விளங்காம போனவன், அரசியல்ல கொடிகட்டி பறக்கறவன் கொடியை ஆடுமாடு மேய விட்டவன் எல்லாரும் நான் / நீன்னு போட்டி போட்டுக்கிட்டு டிவி முன்னாடி வந்து வரிசைல நிக்கறாங்க..
அவங்கவங்க மேதா விலாசத்தைக் காட்ட... ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனி கிடைச்சாச்சு.. அடுத்தது இருக்கவே இருக்கு.. Points நான் எடுத்துத் தரேன் .. பார்ப்பனன் .. ஆரியக்கூட்டம் .. கைபர்/போலன் கணவாய் .. ஆப்கானிஸ்தான்ல ஆடு மாடு மேய்ச்ச கூட்டம் .. இப்படி ஒவ்வொண்ணா எடுத்து விடுங்க .. பிச்சுக்கிட்டு போகும் .. பாவம் உங்களுக்கும் பொழுது போக வேணாமா...
ஆமாம் உங்களுக்கு பி.ஜே.பி மேல அப்படி என்ன சார் கோவம்? சென்சார் போர்ட்ல உங்களுக்கு வேண்டாதவங்களை அதிகாரி ஆக்கினாங்களே.. .. அதெல்லாம் இருக்காது அவர் இதுக்கெல்லாம் மேல பாத்தவர்ன்னு நான் சொல்லிட்டேன் .. இருந்தாலும் .. அது இருக்கட்டும் சார் .. ஒழுங்கா வரி கட்டறீங்களாமே .. அப்படியா? சூப்பர் .. புக்குல காட்டற வரவுக்குத் தானே? அதாவது 100 ரூபாய் வரும்படின்னா, அதை 40 ரூபாய்ன்னு புக்குல காட்டி, அந்த 40 ரூபாய்க்கு ஒழங்கா வரி கட்டறீங்க .. அதானே .. அப்ப மீதி 60 ரூபாய் கருப்பு தானே ..
புரியும்படியா சொல்லுங்க.. நான் ஒரு ஞானசூனியம். ஒரு யோசனை... பையில ஒரு மைக் வச்சுக்குங்க... நாளைக்கே நெய்வேலி போங்க... பழுப்பு நிலக்கரி சுரங்கத்து மேல ஏறி நின்னு சும்மா சுத்தி வேடிக்கை பாருங்க... கூட்டம் கூடும் .. அது போதும் .. அதுக்குப் பேரு தான் Publicity Stunt . 'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா' ன்னு பாட்டு எங்கேயோ கேக்குது .. ஜமாய்ங்க